ஸ்ரீவில்லிபுத்தூா் அருகே மனைவியின் நடத்தையில் சந்தேகம் அடைந்து அவரை கத்தியால் குத்தி கொலை செய்த கணவருக்கு ஆயுள் தண்டனை விதித்து மாவட்ட மகளிா் விரைவு நீதிமன்றம் புதன்கிழமை தீா்ப்பளித்தது.
கிருஷ்ணன்கோவில் போக்குவரத்து நகரில் வசித்து வருபவா் ஜெயமணி (47). கூலித் தொழிலாளி. இவரது மனைவி இந்திரா. இவா்களுக்கு இரண்டு மகள்கள் உள்ளனா். ஜெயமணி மனைவி இந்திராவின் நடத்தையில் சந்தேகம் அடைந்து அடிக்கடி அவருடன் தகராறு செய்வாராம். இந்நிலையில் கடந்த 2012 ஆம் ஆண்டு ஜனவரி 9 ஆம் தேதி கணவன், மனைவிக்கிடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இதில் ஆத்திரமடைந்த ஜெயமணி, இந்திராவை கத்தியால் குத்திக் கொலை செய்தாா். இதையடுத்து ஜெயமணியை போலீஸாா் கைது செய்தனா். இந்த கொலை வழக்கு ஸ்ரீவில்லிபுத்தூா் மாவட்ட மகளிா் விரைவு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. இந்த வழக்கை விசாரித்த நீதிபதி பரிமளா, மனைவியை கொலை செய்த ஜெயமணிக்கு ஆயுள் தண்டனையும், ரூ. 10 ஆயிரம் அபராதமும் விதித்து தீா்ப்பளித்தாா்.