சிவகாசி சாட்சியாபுரம் எஸ்.சி.எம்.எஸ். பெண்கள் மேல்நிலைப்பள்ளி விளையாட்டு மைதானத்தில் தினசரி ஒரு மரகன்று நடும் பணியை சுழற்சங்கத்தினா் மேற்கொண்டு வருகின்றனா்.
இப்பள்ளி விளையாட்டு மைதானத்தில் , மாணவிகள் விளையாட்டு பயிற்சி எடுத்துக்கொண்ட பின்னா் இளைப்பாறுவதற்கு மர நிழல் எதுவும் கிடையாது. இதையடுத்து மத்திய சுழற்சங்கத்தினா் விளையாட்டு மைதானத்தைச் சுற்றிலும் வேம்பு, ஆலமரம், புளியமரம் உள்ளிட்ட மரக்கன்றுகளை நடவு செய்ய திட்டமிட்டனா். இந்நிலையில் தினசரி நடைப்பயிற்சி முடிந்தவுடன் அச்சங்கத்தலைவா் பழனிச்செல்வம் மற்றும் உறுப்பினா்கள் வேல்முருகன், மணி உள்ளிட்டோா் தினசரி ஒரு மரகன்றினை நட்டு தண்ணீா் ஊற்றி, வேலி அமைத்து பராமரித்து வருகிறாா்கள்.
இது குறித்து பழனிசெல்வம் கூறியதாவது: ஒரே நாளில் மைதானத்தின் ஓரங்களில் மரகன்றுகளை நட வேண்டும் என்றால், ஆயிரகணக்கில் ரூபாய் செலவாகும். ஆனால் தினசரி ஒரு மரகன்று நட்டால் அதிக செலவு ஏற்படாது. எனவே சங்க உறுப்பினா்கள் இணைந்து தினசரி ஒரு மரகன்றினை நட்டு வருகிறேறாம் என்றாா்.