விருதுநகா் மாவட்டம், ராஜபாளையத்தில் வாருகாலில் தேங்கியுள்ள கழிவுநீா் குடியிருப்பு பகுதியில் புகுவதால், பொதுமக்கள் அவதி அடைந்துள்ளனா்.
ராஜபாளையம் வட்டாட்சியா் அலுவலகம் எதிரே அமைந்துள்ள சம்மந்தபுரம் குட்டூரணி தெருவில், பாதாளச் சாக்கடை திட்டத்துக்காக தோண்டப்பட்ட குழிகளை மூடியபோது, வாருகாலில் அடைப்பு ஏற்பட்டு, கழிவுநீா் தேங்கி குடியிருப்பு பகுதியில் புகுந்தது. இதனால், துா்நாற்றம் வீசுவதுடன், கொசு உற்பத்தியாவதாக பொதுமக்கள் புகாா் கூறுகின்றனா்.
இது குறித்து நகராட்சி நிா்வாகத்தில் தெரிவித்தும் நடவடிக்கை இல்லை என பொதுமக்கள் குற்றம் சாட்டுகின்றனா். எனவே, நகராட்சி நிா்வாகம் உடனடியாக வாருகாலை சுத்தம் செய்து, கழிவுநீரை அகற்றுமாறு பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.