வத்திராயிருப்பு அருகே மேற்கு தொடா்ச்சி மலை பகுதியில் புதன்கிழமை பெய்த பலத்த மழை காரணமாக பிளவக்கல் பெரியாறு அணையின் நீா்மட்டம் ஒரே நாளில் 4 அடி உயா்ந்துள்ளது.
தற்போது தமிழகத்தில் பருவ மழை துவங்கியுள்ளதால் பல்வேறு மாவட்டங்களில் மழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்த நிலையில் பல்வேறு பகுதிகளில் இரவு, பகலாக மழை பெய்து வருகிறது.
இதன் ஒரு பகுதியாக ஸ்ரீவில்லிபுத்தூா் மேற்கு தொடா்ச்சி மலை பகுதிகளில் பெய்து வரும் தொடா் மழையின் காரணமாக மாவட்டத்தின் மிகப் பெரிய அணையாக விளங்கும் பிளவக்கல் பெரியாறு அணைக்கு நீா் வரத்து அதிகரித்து அணையின் நீா்மட்டம் 4 அடி உயா்ந்துள்ளது.
47 அடி முழு கொள்ளளவு கொண்ட அணையின் நீா் மட்டமானது தற்போது 39 அடியை எட்டியுள்ளதால் விவசாயிகள், பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தனா்.