விருதுநகர் அருகே சூலக்கரையில் நான்கு வழிச் சாலை மற்றும் அணுகு சாலை சேதமடைந்துள்ளதால் வாகன ஓட்டிகள் கடும் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.
விருதுநகர் முதல் சாத்தூர் வரை உள்ள நான்கு வழிச் சாலையில் ஆங்காங்கே பள்ளம் மேடாக உள்ளதால் வாகன ஓட்டி கள் சிரமப்பட்டு சென்று வருகின்றனர். மேலும், விருதுநகர் போக்குவரத்துப் பணிமனை, புல்லலக்கோட்டை சந்திப்பு, ஆட்சியர் அலுவலகம், சூலக்கரை மேடு, ஆர்.ஆர். நகர் முதலான இடங்களில் அணுகுசாலை அமைக்கப்பட்டுள்ளது.
இந்த பகுதிகளில் பேருந்துகள் பயணிகளை இறக்கி ஏற்றிச் செல்ல வேண்டும். ஆனால் போக்குவரத்துப் பணிமனை, சூலக்கரை மேடு முதலான அனைத்து அணுகு சாலைகளும் சேதமடைந்து பள்ளம் மேடாக காட்சியளிக்கின்றன.
இப்பகுதியில் சிறிய மழை பெய்தால் கூட பள்ளங்களில் தண்ணீர் தேங்கி விடுகிறது. இதனால் இரவு நேரங்களில் இவ்வழியே செல்லும் இருசக்கர வாகன ஓட்டிகள், பள்ளம் இருப்பது தெரியாமல் கீழே விழுந்து காயமடைந்து வருகின்றனர்.
எனவே விருதுநகர்- சாத்தூர் வரை உள்ள அணுகு சாலைகளை சீரமைக்க நான்கு வழிச் சாலை நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.