விருதுநகர் மாவட்டம் திருச்சுழி அருகே வியாழக்கிழமை ஆடு மேய்க்கச் சென்ற பள்ளி மாணவர் ரயிலில் அடிபட்டு உயிரிழந்தார்.
திருச்சுழி அருகே உள்ள குருவியேந்தல் கிராமத்தைச் சேர்ந்தவர் மலைச்சாமி மகன் அறிவரசன் (15). இருஞ்சிறை கிராமத்திலுள்ள அரசு உயர்நிலைப் பள்ளியில் 10 ஆம் வகுப்புப் படித்து வந்த இவர் தினமும் அதிகாலையில் தாங்கள் வளர்க்கும் ஆடுகளை மேய்ச்சலுக்கு கூட்டிச் சென்றுவிட்டு பின்னர் வீட்டுக்கு வந்து அதன் பிறகே பள்ளிக்குச் செல்வாராம்.
வியாழக்கிழமை வழக்கம் போல் ஆடுகளை மேய்த்துக் கொண்டு சென்றவர், நீண்ட நேரமாகியும் வீடு திரும்பவில்லையாம். இதையடுத்து அவரது பெற்றோர் பல இடங்களில் தேடி வந்தனர். அப்போது இருஞ்சிறை கிராமப் பகுதியில் உள்ள ரயில் தண்டவாளத்தில் ரயிலில் அடிபட்ட நிலையில் அறிவரசன் இறந்து கிடந்துள்ளார்.
இதுதொடர்பாக நரிக்குடி காவல் நிலையத்தில் அறிவரசனின் பெற்றோர் புகார் அளித்தனர். அதன்பேரில், விருதுநகரிலிருந்து ரயில்வே போலீஸார் வந்து அறிவரசனின் உடலை மீட்டு உடற்கூறாய்வுக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.