விருதுநகர் மாவட்டம் ராஜபாளையத்தில் பெண்ணிடம் நகைக்கு பாலீஷ் போட்டுத் தருவதாகக் கூறி நகையுடன் மாயமானது தொடர்பாக வட மாநில இளைஞர் ஒருவரைப் பிடித்து போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
ராஜபாளையம் பழைய பேருந்து நிலையம் அருகே உள்ள சீனிவாசன் புதுத் தெருவைச் சேர்ந்தவர் ராஜலட்சுமி. கடந்த 2 ஆம் தேதி இவர் வீட்டுக்கு வந்த வடமாநிலத்தை சேர்ந்த இளைஞர்கள் சிலர் தங்கம், வெள்ளி நகைகளுக்கு பாலீஷ் போட்டுத் தருவதாகக் கூறியுள்ளார்.
இதையடுத்து ராஜலட்சுமி தனது வெள்ளி கொலுசை கொடுத்துள்ளனர். அதற்கு அவர்கள் பாலீஷ் போட்டு கொடுத்துள்ளார். இதன் பின்னர் ராஜலட்சுமி ஒன்றரை பவுன் சங்கிலியை கொடுத்துள்ளார். ஆனால் அதற்கு பாலீஷ் போட்டு கொடுக்காமல் அந்த இளைஞர்கள் நகையுடன் மாயமானார்களாம். இதைத்தொடர்ந்து ராஜலட்சுமியும் அவரது உறவினர்களும் அவர்களை தேடிவந்தனர்.
இந்நிலையில் வியாழக்கிழமை ராஜபாளையம் பழைய பேருந்து நிலையத்தில் நகையை எடுத்துக் கொண்டு மாயமான கும்பலைச் சேர்ந்த நபர் ஒருவர் இருந்துள்ளார். இதுகுறித்து ராஜலட்சுமி தனது உறவினர்களிடம் தெரிவித்துள்ளார். உறவினர்கள் அங்கு சென்று விசாரிக்க முயன்ற போது, அந்த இளைஞர் தப்பி ஓட முயன்றுள்ளார்.
துரத்திப் பிடித்த உறவினர்கள் அவரை பிடித்து தாக்கியதுடன், ராஜபாளையம் வடக்கு காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர். போலீஸார் அந்த இளைஞரிடம் மேற்கொண்ட விசாரணையில், அவர் பிகார் மாநிலத்தைச் சேர்ந்த மன்னுகுமார் என்பது தெரியவந்தது. தொடர்ந்து அவரிடம் போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.