சாத்தூர் அருகே படந்தால் கிராமத்தில் அரசு மேல்நிலைப் பள்ளி அருகே கழிவுநீர் தேங்கியுள்ளதால் சுகாதாரக்கேடு ஏற்பட்டுள்ளது.
இக்கிராமத்தில் சுமார் 10ஆயிரத்துக்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இக் கிராமத்தில் ஏற்கெனவே முறையான அடிப்படை வசதிகள் எதுவும் ஊராட்சி நிர்வாகத்தால் செய்யப்படவில்லை. இந்நிலையில் இப் பகுதியில் உள்ள அரசு உயர்நிலைப் பள்ளியின் வடக்கு பகுதியில் உள்ள சுற்றுச்சுவர் அருகே செல்லும் வாருகால் முறையாக சுத்தம் செய்யபடாமல் உள்ளது. இதனால் மழை நீரும் கழிவு நீரும் கலந்து சாலையில் தேங்குவதால் சுகாதாரக்கேடு ஏற்பட்டுள்ளது.
இந்த பாதை வழியாகத்தான் இங்குள்ள அரசு உயர்நிலைப் பள்ளிக்கும், அங்கன்வாடி மற்றும் மாணவர்கள் விடுதிக்கும் செல்ல வேண்டிய நிலை உள்ளது. எனவே இவ்வழியாக செல்லும் பள்ளி குழந்தைகளுக்கும், இப்பகுதியில் வசிப்பவர்களுக்கும் நோய் தொற்று ஏற்படும் அபாயம் உள்ளது.
எனவே இப்பகுதியில் கழிவு நீர் தேங்காத வகையில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொது மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.