விருதுநகர் - அழகாபுரி சாலையில் எரிச்சநத்தம் அருகே பாலம் அமைக்கும் பணி நடைபெற்று வருவதால் அப்பகுதியில் ஆறு அடி பள்ளத்தில் அமைக்கப்பட்டுள்ள மாற்றுப் பாதை தரமின்றி உள்ளதால் அவ்வழியே செல்லும் வாகனங்கள் விபத்தில் சிக்கி கொள்வதாக பொதுமக்கள் புகார் தெரிவிக்கின்றனர்.
விருதுநகரிலிருந்து ஸ்ரீவில்லிபுத்தூர், ராஜபாளையம், வத்திராயிருப்பு முதலான பகுதிகளுக்கு தினந்தோறும் ஏராளமான வாகனங்கள் செல்கின்றன. இந்த நிலையில் எரிச்சநத்தம் அருகே உள்ள செங்கோட்டை சமத்துவபுரத்தில் சாலையின் குறுக்கே பாலம் அமைக்கும் பணி கடந்த சில மாதங்களாக நடைபெற்று வருகிறது. இப்பால பணி நடைபெறுவது குறித்து, அப்பகுதியில் எவ்வித விளம்பரப் பலகையும் வைக்கப்படவில்லை. மேலும், பாலம் கட்டுமானப் பணிக்காக மாற்றுப்பாதை ஆறு அடி பள்ளத்தில் அமைத்துள்ளனர்.
அப்பகுதியில் ஏற்கெனவே களிமண் தரை என்பதால், மழை நேரத்தில் வாகனங்கள் செல்ல முடியாத நிலை உள்ளது. மேலும், மாற்றுப் பாதையானது பள்ளம், மேடாக இருப்பதால் வாகன ஓட்டிகள் சிரமத்துடன் அப்பகுதியை கடந்து சென்று வருகின்றனர். இந்த நிலையில், கடந்த சில தினங்களுக்கு முன்பு இரவில் வந்த கார், மாற்றுப் பாதையில் வந்த போது விபத்துக்குள்ளானது. அதில் கார் ஓட்டுநர் ராமர் பலத்த காயமடைந்தார். அதேபோல், இரு சக்கர வாகன ஓட்டிகளும் மழை நேரத்தில் மாற்றுப் பாதையில் செல்ல முடியாமல் கீழே வழுக்கி விழுந்து காயமடைவதாக புகார் தெரிவிக்கின்றனர். எனவே பாலம் கட்டும் பகுதியில் எச்சரிக்கை பலகை மற்றும் தரமான மாற்றுப் பாதை அமைக்க மாவட்ட நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.