காரியாபட்டி அருகே திங்கள்கிழமை இரவு இருசக்கர வாகனம் மீது அரசுப் பேருந்து மோதியதில் கட்டடத் தொழிலாளர்கள் 2 பேர் உயிரிழந்தனர்.
விருதுநகர் மாவட்டம் காரியாபட்டி அருகே உள்ள கரியனேந்தல் கிராமத்தைச் சேர்ந்தவர்கள் மலைச்சாமி மகன் கண்ணன் (40), கோபால் மகன் போத்திராஜ் (55). கட்டடத் தொழிலாளர்களான இவர்கள் இருவரும் திங்கள்கிழமை இரவு இருசக்கர வாகனத்தில் காரியாபட்டி நோக்கிச் சென்றுள்ளனர். நான்கு வழிச் சாலையில் கே. கரிசல்குளம் அருகே வந்த போது எதிரே காரியாபட்டியிலிருந்து விருதுநகர் நோக்கி வந்த அரசுப் பேருந்து இருசக்கர வாகனத்தின் மீது மோதியது.
இதில் சம்பவ இடத்திலேயே கண்ணன் உயிரிழந்தார். பலத்த காயமடைந்த போத்திராஜ் காரியாபட்டி அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் உயிரிழந்தார். இதுகுறித்து காரியாபட்டி போலீஸார் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.