விருதுநகரில் செவ்வாய்க்கிழமை மூன்றாம் வகுப்பு படிக்கும் மாணவி இந்தியன் புக் ஆர் ரெர்கார்டுக்காக நீச்சல் குளத்தில் தண்ணீரில் மிதந்தபடி 37 யோகாசனங்களை 5.57 நிமிடங்களில் செய்து சாதனை முயற்சியில் ஈடுபட்டார்.
விருதுநகர் ஆர்எஸ் நகரை சேர்ந்தவர் கார்த்தீஸ்வரன் - ரேவதி தம்பதியின் மகள் நவநீதாஸ்ரீ (9). இவர் இங்குள்ள ச.வே.அ. நடுநிலைப் பள்ளியில் மூன்றாம் வகுப்பு படித்து வருகிறார். இவர் கடந்த ஐந்து ஆண்டுகளாக யோகாசனப் பயிற்சி செய்து வருகின்றார். இந்த நிலையில், கடந்த ஓராண்டுக்கு முன்பு நீச்சல்குளத்தில் யோகாசனம் செய்யும் முயற்சியில் ஈடுபட்டார். அதன் பின்னர் தற்போது கின்னஸ் சாதனை முயற்சிக்காக செவ்வாய்க்கிழமை விருதுநகர் செந்திக்குமார நாடார் கலை அறிவியல் கல்லூரியில் உள்ள நீச்சல் குளத்தில் தண்ணீரில் மிதந்தபடி திரிவிக்கரமாசனம், ஏகபாததண்டாசனம், கூர்மஆசனம் உள்ளிட்ட 37 யோகாசனங்களை 5.57 நிமிடங்களில் செய்து காட்டினார். இதுகுறித்து மாணவி நவநீதாஸ்ரீ கூறுகையில், நான் மூன்று வயது முதல் யோகாசனம் செய்து வருகிறேன். எனது தாய் நீச்சல் பயிற்சியாளர் என்பதால், யோகாவில் உள்ள பல்வேறு ஆசனங்களை தண்ணீரில் செய்து சாதனை முயற்சி செய்ய அறிவுறுத்தினார். அதன் பேரில், கடந்த ஓராண்டுக்கு முன்பு தண்ணீரில் மிதந்தபடி ஆசனங்களை செய்து வருகிறேன். ஏற்கெனவே யோகாவில் மாவட்ட, மாநில அளவில் பங்கேற்று பல்வேறு பரிசுகள் பெற்றுள்ளேன். மேலும் இந்த சாதனை முயற்சி யோகா ஆசிரியர் பொன்ராஜ் மற்றும் எனது பெற்றோர் வழிகாட்டுதலின் பேரில் செய்ய முடிந்தது என்றார்.