மாநில அளவிலான அறிவியல் கருத்தரங்கு போட்டிக்கு அருப்புக்கோட்டையில் உள்ள தனியார் பள்ளி மாணவர் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
இதுகுறித்து அருப்புக்கோட்டை இக்ரா மெட்ரிக் பள்ளி முதல்வர் ஷேக்மகபூப் செவ்வாய்க்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு: தமிழ்நாடு அரசு பள்ளிக் கல்வித்துறையும், மத்திய அரசின் பெங்களூரு விஸ்வேஸ்வரய்யா தொழில் மற்றும் தொழில்நுட்ப அருங்காட்சியகமும் இணைந்து ஒவ்வொரு ஆண்டும் மாநில அளவிலான கருத்தரங்கை நடத்தி வருகிறது. இது கல்வி மாவட்டம், வருவாய் மாவட்ட அளவிலும், பின்னர் மாநிலம் மற்றும் தேசிய அளவிலும் நடைபெற்று வருகிறது.
இதன்படி "மனிதகுல வளர்ச்சியில் வேதியியல் தனிமங்களின் பங்கு' எனும் தலைப்பில் வருவாய் மாவட்ட அளவிலான அறிவியல் கருத்தரங்கு விருதுநகரில் உள்ள செய்யது முகம்மது மேல்நிலைப்பள்ளியில் திங்கள்கிழமை நடைபெற்றது. இதில் இக்ரா மெட்ரிக் பள்ளியின் 10 ஆம் வகுப்பு மாணவர் தானிஷ்அகமது முதல் பரிசு பெற்று மாநில அளவிலான கருத்தரங்குக்கு தேர்வு பெற்றுள்ளார்.
வெற்றி மாணவரை பள்ளியின் தலைவர் முகம்மது யூசுப், பள்ளியின் முதல்வர் ஷேக் மகபூப் மற்றும் ஆசிரிய, ஆசிரியைகள் பாராட்டினர் என அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.