5 மற்றும் 8 ஆம் வகுப்புக்கான அரசு பொதுத்தேர்வு திட்டத்தை கைவிட வேண்டும் என தலித் விடுதலை இயக்கத்தின் கல்வி உரிமை மாநாட்டில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
விருதுநகர் மாவட்டம் சாத்தூரில் உள்ள தனியார் அரங்கில் சனிக்கிழமை நடைபெற்ற இந்த மாநாட்டுக்கு தலித் விடுதலை இயக்கத்தின் மாநில பொதுச்செயலாளர் கருப்பையா தலைமை வகித்தார்.
விருதுநகர் மாவட்டச் செயலாளர் வின்சென்ட், மாவட்ட துணைச் செயலாளர் லிங்கப்பன், மாவட்ட இளைஞரணிச் செயலாளர் சமுத்திரக்கனி, விருதுநகர் ஒன்றியச் செயலாளர் தனுஷ்கோடி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கத்தின் மாவட்டச் செயலாளர் லட்சுமிகாந்தன் தொடக்க உரையாற்றினார்.
மாநாட்டில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்: மத்திய அரசால் கொண்டுவரப்படும் புதிய கல்விக் கொள்கை, நீட் தேர்வு ஆகியவற்றை உடனடியாக ரத்து செய்ய வேண்டும்.
தமிழகத்தில் கடந்த இரண்டு ஆண்டுகளாக ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின மாணவர்களுக்கு வழங்கப்படாமல் நிலுவையில் உள்ள கல்வி உதவித்தொகை வழங்கப்பட வேண்டும். மேலும் தமிழக அரசால் கொண்டுவரப்படும் 5 மற்றும் 8 ஆம் வகுப்பு மாணவர்களுக்கான அரசு பொதுத்தேர்வு திட்டத்தை கைவிட வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றபட்டன.
மாணவரணி மாநிலச் செயலாளர் பீமாராவ் வரவேற்புரையாற்றினார்.