மேம்பாலப் பணிகளை விரைவுபடுத்த தலைமைப் பொறியாளர் அறிவுரை
விருதுநகர் மாவட்டத்தில் நடைபெறும் மேம்பாலப் பணிகளை விரைவுபடுத்துமாறு நெடுஞ்சாலைத் துறை அதிகாரிகளுக்கு அத்துறையின் திட்ட தலைமைப் பொறியாளர் அறிவுறுத்தினார்.
தமிழக நெடுஞ்சாலைத் துறை சார்பில் விருதுநகர் மாவட்டத்தில் பல்வேறு பணிகள் நடைபெற்று வருகின்றன. இதன் ஒரு பகுதியாக ராஜபாளையம் சத்திரப்பட்டி ரயில்வே மேம்பால பணி நடைபெறுகிறது. இப்பணியை நெடுஞ்சாலைத்துறை திட்ட தலைமைப் பொறியாளர் முருகேசன் வெள்ளிக்கிழமை நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.
அப்போது மேம்பால பணிகளை விரைந்து முடிக்கவும் பணிகளுக்கு இடையூறாக உள்ள மின் கம்பங்களை மாற்றியமைக்கவும், பாலத்தின் இருபுறமும் பயனுறு சாலை அமைக்க நிலம் கையகப்படுத்தும் பணிகளை துரிதப்படுத்தவும் சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளுடன் இணைந்து செயலாற்றவும் நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகளிடம் அவர் அறிவுறுத்தினார்.
மேலும் சிவகாசி, திருத்தங்கல், சாத்தூர் ஆகிய நகரங்களில் அமைய உள்ள ரயில்வே மேம்பால பணிகளையும், ராஜபாளையம் இணைப்பு சாலை மற்றும் அருப்புகோட்டை புறவழிச்சாலை பணிகளை விரைந்து முடித்து மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வரவேண்டும் எனவும் வலியுறுத்தினார். ஆய்வின் போது கோட்டபொறியாளர் லிங்குசாமி மற்றும் அதிகாரிகள் உடனிருந்தனர்.