விருதுநகர் மாவட்டம் திருச்சுழி அருகே போலீஸ்காரர் வீட்டின் முன்பாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த இருசக்கர வாகனத்துக்கு மர்மநபர்கள் சனிக்கிழமை நள்ளிரவு தீ வைத்தனர்.
திருச்சுழி அருகே நார்த்தம்பட்டி கிராமத்தில் வசிப்பவர் ரமேஷ்(36). இவர் காரியாபட்டி காவல்நிலையத்தில் காவலராகப் பணியாற்றி வருகிறார். இவரது மனைவி சுஜாதா(32). பள்ளி ஆசிரியை. இந்நிலையில் சுஜாதா சனிக்கிழமை தனது வீட்டு முன்பாக வழக்கம்போல தனது இருசக்கர வாகனத்தை நிறுத்தி வைத்திருந்தாராம். பின்னர் மறுநாள் ஞாயிற்றுக்கிழமை காலை சுஜாதா வந்து பார்த்தபோது, இருசக்கர வாகனத்திற்கு மர்மநபர்கள் நள்ளிரவில் தீ வைத்து சென்றது தெரியவந்தது. இதில் வாகனத்தின் இருக்கை உள்ளிட்ட பகுதிகள் சேதமடைந்திருந்ததும் தெரியவந்தது. இது குறித்து ம.ரெட்டியபட்டி காவல்நிலையத்தில் சுஜாதா அளித்த புகாரின் பேரில் போலீஸார் ஞாயிற்றுக்கிழமை வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனர்.