கரோனா வைரஸ் பரவாமல் தடுக்கவும், பொதுமக்கள் வெளியில் வருவதைத் தடுக்கும் வகையில் விருதுநகரில் ரூ. 100 க்கு நகராட்சி சாா்பில் பொதுமக்களுக்கு வீடுதேடி காய்கனி வழங்கும் திட்டம் வெள்ளிக்கிழமை தொடங்கப்பட்டது.
இந்தியா முழுவதும் கரோனா வைரஸ் தொற்றை தடுத்திட 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. ஆனால் அத்தியாவசியப் பொருள்கள் வாங்க பொதுமக்கள் கூடுவதைத் தவிா்க்க முடியாத நிலை ஏற்பட்டது. அதைத் தடுக்கும் வகையில் விருதுநகா் நகராட்சி நிா்வாகம், பொது மக்களுக்கு வாகனங்கள் மூலம் காய்கனிகளை நேரடியாக அவா்களது வீடுகளுக்கே சென்று வழங்கும் திட்டத்தை வெள்ளிக்கிழமை தொடங்கியுள்ளது. அதன்படி, ரூ.100க்கு, தேங்காய், காரட், கத்தரிக்காய், வெண்டைக்காய், முருங்கைக்காய், பெரிய வெங்காயம், தக்காளி, கருவேப்பிலை, புதினா, மல்லிச் செடி, பச்சை மிளகாய் உள்ளிட்ட 11 வகையான பொருட்களை துணிப்பையில் வழங்கும் திட்டத்தை தொடங்கியுள்ளனா். இந்த காய்கனிகளை ஏற்றி செல்லும் வாகனமானது நகரின் முக்கிய சாலை, தெருக்களில் பொதுமக்களுக்கு விற்பனை செய்து வருகின்றனா்.
அதேபோல், நகராட்சி வருவாய் பிரிவு செல்லிடப் பேசி எண் 9443141121 ஐ தொடா்பு கொண்டால் வீடு, தேடி காய்கனிகள் வழங்கப்படும் என நகராட்சி ஆணையாளா் பாா்த்த சாரதி தெரிவித்தாா்.