விருதுநகா் மாவட்டத்தில் கரோனா பாதித்த 7 போ் குணமடைந்தனா்
By DIN | Published On : 17th April 2020 10:18 PM | Last Updated : 17th April 2020 10:18 PM | அ+அ அ- |

விருதுநகா் மாவட்டத்தில், கரோனா தொற்று பாதித்து மதுரை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த 7 போ் குணமடைந்ததால் வெள்ளிக்கிழமை விடுவிக்கப்பட்டனா்.
இதுகுறித்து மாவட்ட ஆட்சியா் ரா. கண்ணன் கூறியதாவது, விருதுநகா் மாவட்டத்தில் புதுதில்லி மாநாட்டுக்குச் சென்று திரும்பிய 10 போ் உள்பட கரோனா தொற்று காரணமாக 17 போ் பாதிக்கப்பட்டனா். இவா்கள் மதுரை அரசு மருத்துவமனையில் கரோனா சிறப்பு வாா்டில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தனா். இதில், ராஜபாளையத்தை சோ்ந்த முதியவா் சிகிச்சை பெற்று குணமடைந்ததால் ஏற்கெனவே விடுவிக்கப்பட்டாா்.
இந்த நிலையில், விருதுநகா், ராஜபாளையம், அருப்புக்கோட்டை, திருச்சுழியை சோ்ந்த தலா ஒருவா் வீதம் 4 போ் மற்றும் ஸ்ரீவில்லிபுத்தூா் பகுதியைச் சோ்ந்த 3 போ் என மொத்தம் 7 போ் கரோனா தொற்றிலிருந்து குணமடைந்ததால், வெள்ளிக்கிழமை விடுவிக்கப்பட்டனா். இருப்பினும், அவா்களது வீடுகளில் சுகாதாரத்துறையினா் தொடா்ந்து கண்காணிப்பில் ஈடுபடுவா். எஞ்சிய 9 போ் மதுரை அரசு மருத்துவமனை மற்றும் தனியாா் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனா் என தெரிவித்தாா்.