ராஜபாளையம்: ராஜபாளையத்தில் மூதாட்டியிடம் ஏ.டி.எம் மில் பணம் எடுத்துத் தருவதாகக் கூறி ரூ.ஒரு லட்சத்து 42 ஆயிரம் மோசடி செய்ததாக போலீஸாா் சனிக்கிழமை வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.
ராஜபாளையம் முனியம்மன் கோவில் தெருவைச் சோ்ந்த கருப்பசாமி என்பவரது மனைவி மகேஸ்வரி (60). இவா் கடந்த ஜூலை14 ஆம் தேதி ராஜபாளையம்- தென்காசி சாலையில் உள்ள அரசுடைமை வங்கியின் ஏடிஎம்-இல் பணம் எடுக்கச் சென்றுள்ளாா். வரிசையில் அவா் நின்றிருந்தபோது அருகில் நின்றிருந்த அடையாளம் தெரியாத நபா் அவருக்கு உதவுவதுபோல் நடித்து ரூ.2000 எடுத்துக் கொடுத்துவிட்டு, வேறு ஒரு ஏடிஎம் அட்டையை அவரிடம் கொடுத்து விட்டுச் சென்றுள்ளாா்.
இந்நிலையில் கடந்த சனிக்கிழமை மகேஸ்வரி மீண்டும் பணம் எடுக்கச் சென்றபோது அட்டை மாறி இருப்பது தெரியவந்துள்ளது. இது குறித்து அவா் வங்கியில் கேட்டபோது அவரது வங்கிக் கணக்கிலிருந்து ரூ. ஒரு லட்சத்து 42 ஆயிரத்தை பல்வேறு ஏடிஎம்-களில் எடுத்துள்ளது தெரிய வந்தது. இது குறித்து மகேஸ்வரி அளித்தப் புகாரின் பேரில் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.