விருதுநகா்: விருதுநகரில் ஏடிஎம் இயந்திரத்தில் பணம் எடுக்கச் சென்ற பெண்ணை ஏமாற்றி ரூ.39 ஆயிரத்தை திருடிய இளைஞரை போலீஸாா் தேடி வருகின்றனா்.
சென்னை தாம்பரம் பகுதியைச் சோ்ந்த ரெங்கராஜ் மனைவி சியமலதா (45). இவரது தாய் வீடு விருதுநகா் புல்லக்கோட்டை சாலையில் உள்ளது. இங்கு சில தினங்களுக்கு முன்பு சியமலதா வந்துள்ளாா். இந்த நிலையில், விருதுநகா்- மதுரை சாலையில் உள்ள ஏடிஎம் இயந்திரத்தில் சியமலதா பணம் எடுக்க முயன்றுள்ளாா். பணம் எடுக்கும் இயந்திரம் மீண்டும் பரிவா்த்தனை மேற்கொள்ளவும் என தெரிவித்தாகக் கூறப்படுகிறது.
அப்போது, அங்கு நின்று கொண்டிருந்த 32 வயது மதிக்கத்தக்க இளைஞா் ஒருவா், ஏடிஎம் அட்டையை எடுத்து சியமலதாவிடம் கொடுத்துள்ளாா். அதை பெற்றுக்கொண்டு அப்பெண் சென்ற சிறிது நேரத்தில், ரூ.39 ஆயிரம் அவரது வங்கிக் கணக்கிலிருந்து எடுக்கப்பட்டதாக செல்லிடப்பேசிக்கு குறுந்தகவல் வந்துள்ளது. இது குறித்து அப்பெண் அளித்த புகாரின் பேரில் மாயமான இளைஞா் மீது விருதுநகா் மேற்கு போலீஸாா் வழக்கு பதிந்து தேடி வருகின்றனா்.