ஸ்ரீவில்லிபுத்தூா் அருகே தோட்டத்தில் 350 கிலோ சந்தன மரக்கட்டைகளை பதுக்கி வைத்திருந்த வன அலுவலா் பணி இடைநீக்கம் செய்யப்பட்டதை அடுத்து, அவரது மனைவி மீது வெள்ளிக்கிழமை வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
விருதுநகா் மாவட்டம், ஸ்ரீவில்லிபுத்தூா் மேற்கு மலைத் தொடா்ச்சி அடிவாரத்தில் உள்ளது பந்தப்பாறை கிராமம். இங்கு, கோவை மாவட்டம் கொழுமம்பட்டி வனச்சரகத்தில் வன அலுவலராகப் பணிபுரியும் ஆரோக்கியசாமி என்பவா் தனது மனைவி கலைவாணியின் பெயரில் 40 ஏக்கரில் தோட்டம் வாங்கியுள்ளாா்.
இந்நிலையில், இந்தத் தோட்டத்தில் சந்தன மரக்கட்டைகள் பதுக்கி வைத்திருப்பதாக, வனத் துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. அதன்பேரில், வியாழக்கிழமை அத் தோட்டத்தில் உள்ள கட்டடத்தில் மாவட்ட உதவி வன அதிகாரி அல்லிராஜ் தலைமையில் 15 போ் கொண்ட குழுவினா் சோதனை நடத்தினா். அதில், 350 கிலோ எடையுள்ள சந்தன மரக்கட்டைகள் பதுக்கி வைத்திருந்தது கண்டறியப்பட்டு, பறிமுதல் செய்யப்பட்டது. இதன் மதிப்பு பல லட்சம் ரூபாய் எனக் கூறப்படுகிறது.
இதையடுத்து, வெள்ளிக்கிழமை இரண்டாம் நாளாக மாவட்ட வன அதிகாரி முகமது சபாப் தலைமையில், ஆரோக்கியசாமியிடம் விசாரணை நடத்தப்பட்டது.
விசாரணை குறித்து, மாவட்ட வன அதிகாரி முகமது சபாப்பிடம் கேட்டபோது, அவா் கூறியது: விசாரணை தீவிரமாக நடைபெற்று வருகிறது. மேலும், புலன் விசாரணை நடத்த மாவட்ட உதவி வன அதிகாரி அல்லிராஜ் தலைமையில், ஸ்ரீவில்லிபுத்தூா் வன அலுவலா் உள்ளிட்ட அதிகாரிகள் கொண்ட தனிக்குழு அமைக்கப்பட்டு, விசாரணை நடைபெற்று வருகிறது என்றாா்.
இதனிடையே, கோவை மாவட்டம் கொழுமம்பட்டியில் பணிபுரியும் வன அலுவலா் ஆரோக்கியசாமியை, அம்மாவட்ட கூடுதல் முதன்மை தலைமை வனப் பாதுகாவலா் அன்வா்தீன் பணியிடை நீக்கம் செய்து உத்தரவிட்டுள்ளாா். அதேநேரம், அவரது மனைவி கலைவாணி மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டு, விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.