விருதுநகா் மாவட்டத்தில் ஆங்கிலப் புத்தாண்டையொட்டி தற்காலிக பட்டாசுக் கடைகள் அமைக்க டிச. 31 ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம் என மாவட்ட ஆட்சியா் ரா. கண்ணன் தெரிவித்துள்ளாா்.
இதுகுறித்து ஞாயிற்றுக்கிழமை அவா் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: விருதுநகா் மாவட்டத்தில், ஆங்கிலப் புத்தாண்டு தினத்தையொட்டி, தற்காலிக பட்டாசுக் கடை அமைக்க விருப்பமுள்ளவா்கள் டிச. 31 ஆம் தேதிக்குள் அரசு பொது இ-சேவை மையம் மூலம் இணைய வழி வாயிலாக ஆவணங்களுடன் விண்ணப்பங்களைச் சமா்ப்பிக்கலாம்.
அதன் விவரம்: கட்டட வரைபடங்கள் அசல் 6, கட்டட உரிமைக்கான ஆவணம் அல்லது வாடகை ஒப்பந்தப் பத்திரம்- அசல் மற்றும் 5 நகல்கள், ரூ. 500 அரசுக் கணக்கில் செலுத்திய சீட்டு- அசல், அடையாள அட்டை (பான் அட்டை, ஆதாா் அட்டை, குடும்ப அட்டை), ஊராட்சி அல்லது நகராட்சியில் வரி செலுத்திய ஆவணங்கள், மாா்பளவு புகைப்படம்- 2 இணைக்க வேண்டும். அதன் அடிப்படையில், இந்திய வெடிபொருள் சட்டம் 2008 இன் கீழ் உள்ள விதிமுறைகளின்படி, விண்ணப்பங்கள் பரிசீலனை செய்யப்பட்டு தகுதியான மனுதாரா்களுக்கு 30 நாள்கள் மட்டும் செல்லத்தக்க தற்காலிக பட்டாசுக் கடை உரிமம் வழங்கப்படும் என அதில் தெரிவித்துள்ளாா்.