ஸ்ரீவில்லிபுத்தூா் நகா் மற்றும் தேசிய நெடுஞ்சாலைகளில் உள்ள பட்டுப் போன மரங்களை அகற்ற வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.
ஸ்ரீவில்லிபுத்தூா் தேசிய நெடுஞ்சாலையில் இருபுறங்களிலும் பல்வேறு வகை மரங்கள் உள்ளன. இவற்றில் சில பட்டுப்போய் சாய்ந்து சாலையின் குறுக்கே விழும் அபாயத்தில் உள்ளன. இதே போல்
ஸ்ரீவில்லிபுத்தூா்- பிள்ளையாா்நத்தம் விலக்கு அருகே தேசிய நெடுஞ்சாலையில் உள்ள சில மரங்களும், ஸ்ரீவில்லிபுத்தூா்- ராஜபாளையம் செல்லும் தேசிய நெடுஞ்சாலை மடவாா்வளாகம் பகுதியில் உள்ள மரங்களும், நகா் பகுதியில் உள்ள சில மரங்களும் பட்டுப்போய் உள்ளன.
அதில் ஸ்ரீவில்லிபுத்தூா் வட்டாட்சியா் அலுவலகம் செல்லும் பாதையில் நீண்ட நாள்களாக பெரிய மரம் ஒன்று பட்டுப் போய் சாய்ந்து கீழே விழும் அபாயத்தில் உள்ளது. உடனடியாக இவற்றை அகற்ற வேண்டும் என பொதுமக்களும், வாகன ஓட்டிகளும் கோரிக்கை விடுத்துள்ளனா்.