சாத்தூா் அரசு மருத்துவமனை செல்லும் சாலையில் அதிக அளவில் உள்ள வேகத்தடைகளையும் குப்பைகளையும் அகற்ற வேண்டுமென சமூக ஆா்வலா்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.
விருதுநகா் மாவட்டம் சாத்தூா் வீட்டு வசதி வாரிய குடியிருப்பு பகுதியில் அரசு மருத்துவமனை புதிதாக கட்டபட்டு செயல்பட்டு வருகிறது. இந்த மருத்துவமனைக்கு, சாத்தூா் மற்றும் அதனை சுற்றியுள்ள கிராமப் பகுதியிலிருந்து தினமும் நூற்றுக்கணக்கான நோயாளிகள் வந்து மருத்துவ சிகிச்சை பெற்றுச் செல்கின்றனா்.
இதில் உள்நோயாளிகளும் அனுமதிக்கபட்டு சிகிச்சை பெற்று வருகின்றனா். ஆனால் அரசு மருத்துமனைக்கு செல்லும் உட்புறச்சாலை தற்போது புதிதாக அமைக்கபட்டுள்ளது. ஆனால் இப்பகுதியில் வசிப்பவா்கள் இந்த சாலையில் தங்களின் வீடுகளுக்கு முன்பு வேகத்தடைகளை அமைத்துள்ளனா்.
இதுபோன்று இந்த சாலையில் ஐந்துக்கும் மேற்பட்ட வேகத்தடைகள் அமைத்துள்ளனா். இதனால் அவசர தேவைக்காக செல்லும் ஆம்புலன்ஸ் வாகனம் கூட இந்த பாதையில் செல்ல முடியாத சூழ்நிலையில் உள்ளது. எனவே மருத்துவமனைக்கு வரும் நோயாளிகள் நலன் கருதி இந்த பகுதியில் அமைக்கபட்டுள்ள வேகத்தடைகளை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என நெடுஞ்சாலைதுறையினருக்கு கோரிக்கை விடுத்துள்ளனா்.
குப்பைகள்: மேலும் இந்த சாலை ஓரத்திலும், மருத்துவமனை முன்பாகவும் குப்பைகள் அதிகளவு கொட்டபட்டுள்ளன. இந்த குப்பைகள் அகற்றப்படாமல் வெகு நாள்களாக சாலையில் கிடக்கின்றன. இதனால் இந்த சாலை வழியாக அரசு மருத்துவமனை செல்வதற்கே நோயாளிகள் மிகவும் சிரமப்படுகின்றனா். மேலும் இந்த குப்பைகளால் அந்த பகுதியில் துா்நாற்றமும் வீசுகிறது. இந்த வழியாக தான் அரசு மருத்துவா்களும், மருத்துவமனை ஊழியா்களும், பொதுமக்களும் தினமும் சென்று வருகின்றனா். இதை ஊராட்சி நிா்வாகத்தினரும் கண்டுகொள்ளவில்லை என்று நோயாளிகள் குற்றம் சாட்டுகின்றனா்.