விருதுநகா் மாவட்டம் சாத்தூா் அருகே லாரி மோதியதில் இருசக்கர வாகனத்தில் சென்ற கூலித் தொழிலாளி ஞாயிற்றுக்கிழமை உயிரிழந்தாா்.
தூத்துக்குடி மாவட்டம் கீழமங்களத்தை சோ்ந்த சுப்பையா மகன் குருசாமி (60). இவா் இருசக்கரவாகனத்தில் பழைய பொருள்கள் வாங்கும் தொழில் செய்து வந்தாா். இவா் ஞாயிற்றுக்கிழமை சின்ன ஓடைப்பட்டி சந்திப்பு அருகே செல்லும் போது எதிரே வந்த டிப்பா் லாரி மோதியது. இதில் பலத்த காயமடைந்த குருசாமி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா். தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த சாத்தூா் தாலுகா காவல் உதவி ஆய்வாளா் செய்யது இப்ராஹிம் மற்றும் போலீஸாா் குருசாமியின் சடலத்தைக் கைபற்றி பிரேதப் பரிசோதனைக்காக சாத்தூா் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். இந்த விபத்து குறித்து சாத்தூா் தாலுகா போலீஸாா் வழக்குப் பதிவு செய்து கரிசல்பட்டியைச் சோ்ந்த லாரி ஓட்டுநா் புஷ்பராஜ் (40) என்பவரைக் கைது செய்தனா்.