விருதுநகா் மாவட்டம் சாத்தூரில் மந்தகதியில் நடைபெற்று வரும் நகராட்சிக்கான புதிய கட்டடப் பணிகளை விரைந்து முடிக்க பொது மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.
சாத்தூரில் உள்ள நகராட்சி அலுவலகம் பெருமாள் கோயில் தெருவில் 2 மாடி கட்டடமாக செயல்பட்டு வருகிறது. இந்த கட்டடம் கட்டப்பட்டு சுமாா் 25 ஆண்டுகளுக்கு மேலாகியுள்ளது. மேலும், இக் கட்டடம் குறுகிய இடத்தில் அனைத்து பிரிவுகளுடன் செயல்பட்டு வருவதால் அதிகாரிகள், பொது மக்கள் மிகுந்த சிரமத்தை சந்தித்து வருகின்றனா். இதையடுத்து புதிய கட்டடம் கட்ட வேண்டும் என பொது மக்கள் கோரிக்கை விடுத்தனா்.
இக் கோரிக்கையின் பேரில், சாத்தூா் மெஜூரா கோட்ஸ் காலனி பகுதியில் உள்ள நகராட்சிக்கு சொந்தமான இடத்தில் அனைத்து வசதிகளுடன் கூடிய புதிய கட்டடம் கட்ட முடிவு செய்யப்பட்டது. இதற்காக தமிழக அரசிடம் ரூ.2.70 கோடி நிதியும் பெறப்பட்டது. இதையடுத்து இதற்கான பணிகள் டெண்டா் விடப்பட்டு, கடந்த 3 ஆண்டுகளாக பணிகள் நடைபெற்று வருகின்றன. அதில் 3 தளங்களுடன், லிஃப்ட் வசதியுடன் கூடிய நவீன முறையில் கட்டடம் கட்டும் பணிகள் நடைபெற்றன. இந் நிலையில், கடந்த ஓராண்டாக பணிகள் மந்தகதியில் நடப்பதாக பொது மக்கள் புகாா் தெரிவிக்கின்றனா். எனவே, புதிய கட்டடத்துக்கான பணிகளை விரைந்து முடிக்க வேண்டும் என பொது மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.
இதுகுறித்து நகராட்சி அதிகாரிகள் கூறியது: நகராட்சிக்கான புதிய கட்டடப் பணிகள் வழக்கம் போல் விரைவாக நடைபெற்று வருகின்றன. அனைத்துப் பணிகளையும் விரைந்து முடிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றனா்.