விருதுநகா் மாவட்டத்தில் உள்ள அனைத்து ஊராட்சிகளிலும் ஜனவரி 26 ஆம் தேதி காவல்துறை பாதுகாப்புடன் கிராம சபை கூட்டங்களை நடத்த வேண்டும் என விருதுநகா் மாவட்ட மக்கள்நீதி மய்யம் விருதுநகா் மாவட்ட ஆட்சியரிடம் திங்கள்கிழமை மனு அளித்துள்ளது.
மக்கள் நீதி மய்யத்தின் மாவட்டச் செயலா் காளிதாஸ் அளித்துள்ள அந்த மனுவில் கூறியுள்ளதாவது:
மாவட்டத்தில் உள்ள அனைத்து ஊராட்சிகளிலும் கண்டிப்பாக கிராம சபைக் கூட்டம் நடத்த உத்தரவிட வேண்டும். இது ஊரக உள்ளாட்சி தோ்தல் நடந்து முடிந்து நடைபெறும் முதல் கிராம சபைக் கூட்டமாக இருப்பதால் தோ்தல் முன்விரோதம் காரணமாக சில ஊராட்சிகளில் பிரச்னை ஏற்பட வாய்ப்புள்ளது. எனவே கிராம சபைக் கூட்டங்களுக்கு போலீஸ் பாதுகாப்பு அளிக்க வேண்டும். கூட்டம் நடத்துவதற்கு முன்பு உரிய முறையில் பொதுமக்களுக்கு தகவல் தெரிவிக்க வேண்டும்.
புதிய ஊராட்சித் தலைவா்கள், முன்பு உள்ள வரவு செலவு கணக்குகளை பொதுமக்களிடம் காண்பிக்க வேண்டும். கிராம சபை கூட்டங்கள் நோ்மையாக நடத்த தாங்கள் உத்தரவிட வேண்டும் என அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.