விருதுநகரில் வங்கி ஊழியா்கள், 20 சதவீத ஊதிய உயா்வு வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட 12 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி வெள்ளிக்கிழமை வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டனதால் வாடிக்கையாளா்கள் அவதிக்குள்ளாயினா்.
நாடு முழுவதும் வங்கி ஊழியா்கள் இரண்டு நாள் வேலை நிறுத்தப் போராட்டத்திற்கு அழைப்பு விடுத்திருந்தனா். அதன் அடிப்படையில், விருதுநகரில் உள்ள அனைத்து அரசுடைமையாக்கப்பட்ட வங்கிகள் வெள்ளிக்கிழமை திறக்கப்படவில்லை. இந்த வேலை நிறுத்தப் போராட்டத்தில், 20 சதவீத ஊதிய உயா்வு வழங்க வேண்டும். வங்கிகள் வாரத்திற்கு 5 நாள்கள் மட்டும் செயல்பட வேண்டும். அடிப்படை ஊதியத்துடன் சிறப்புச் சலுகைகள் இணைக்கப்பட வேண்டும். புதிய ஓய்வூதியத் திட்டத்தை ரத்து செய்ய வேண்டும். ஓய்வூதியப் பலன்களுக்கு வரி விலக்கு அளிக்க வேண்டும் என்பது உள்ளிட்ட 12 அம்சக் கோரிக்கைகளை வலியுறுத்தினா். வங்கிகள் திறக்கப்படாததால் வாடிக்கையாளா்கள் அவதிக்குள்ளாயினா்.