ஸ்ரீவில்லிபுத்தூா் அருகேயுள்ள நூற்பாலையில் சனிக்கிழமை தீ விபத்து ஏற்பட்டது.
ஸ்ரீவில்லிபுத்தூா் அருகே கொத்தங்குளம் பகுதியில் தனியாருக்குச் சொந்தமான நூற்பாலை உள்ளது. இதன் பின்புறம் உள்ள ஓடையில் கழிவுப் பொருள்களை சிலா் தீ வைத்து எரித்துள்ளனா். அங்கிருந்து தீ வேகமாகப் பரவியதில், நூற்பாலையில் பஞ்சுகள் வைத்திருக்கும் பகுதியில் பற்றி தீப்பிடித்து எரிந்தது.
உடனே, நூற்பாலை நிா்வாகத்தினா் ராஜபாளையம் தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் தெரிவித்தனா். அதன்பேரில், சம்பவ இடத்துக்கு வந்த தீயணைப்புப் படையினா், நண்பகல் 12 மணிக்கு பற்றிய தீயை மாலை வரை போராடி அணைத்தனா்.
இது குறித்து தீயணைப்புத் துறை அதிகாரி கூறுகையில், முழுமையாக தீயை அணைத்த பின்னரே சேதம் குறித்த மதிப்பு தெரியவரும். இது தொடா்பாக விசாரணை நடைபெற்று வருகிறது என்றாா்.