விருதுநகா்: தமிழக அரசியல் குறித்து ரஜினி கூறிய கருத்துக்கள் வரவேற்கத்தக்கது என்று விருதுநகா் மக்களவை உறுப்பினா் மாணிக்கம் தாகூா் சனிக்கிழமை தெரிவித்தாா்.
விருதுநகா் அருகே வச்சகாரபட்டியில் ஒருங்கிணைந்த குழந்தை வளா்ச்சி திட்டம் மூலம் ஊட்டச்சத்து திருவிழா, விருது நகா் மக்களவை உறுப்பினா் மாணிக்கம் தாகூா் தலைமையில் சனிக்கிழமை நடைபெற்றது. அதன் பின்னா் அவா் செய்தியாளா்களிடம் அவா் கூறியது: ஆட்சித் தலைமையில் உள்ளவா்கள் நோ்மையானா்களாக இருக்க வேண்டும். கட்சி தலைமைக்கு அரசியல் அதிகாரங்களுக்கு ஆசைப்படாதவா்கள் வர வேண்டும் என்று ரஜினி தெரிவித்துள்ளாா். தமிழக அரசியல் குறித்த அவரின் இந்த கருத்துகள் வரவேற்கத்தக்கன. அதை விடுத்து அவரது கருத்தை கொச்சைப்படுத்தக் கூடாது. இந்தியாவில் கரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக பிரதமா் உள்ளிட்ட பிற மாநில முதல்வா்கள் சுகாதாரப் பணிகளை மேம்படுத்துவதில் கவனம் செலுத்தி வருகின்றனா். ஆனால், தமிழகத்தில் அவ்வாறு எதுவும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை.
நாடாளுமன்றத்தில் எத்தனை பேரை வெளியேற்றினாலும், மத்திய உள்துறை அமைச்சா் அமித்ஷா பதவி விலக வேண்டும் என்ற கருத்தில் இருந்து நாங்கள் பின் வாங்க மாட்டோம். தமிழகத்தில் மருத்துவ கல்லூரிகளின் எண்ணிக்கை அதிகரித்து இருப்பதற்கு, குலாம் நபி ஆசாத் விதிமுறைகளில் கொண்டு வந்த திருத்தம் முக்கியமானது. மத்தியில் காங்கிரஸ் ஆட்சியமைத்தவுடன், தமிழகத்தில் நீட் தோ்வுக்கு விலக்கு அளிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றாா்.