சாத்தூா் அருகே பட்டாசு ஆலை வெடி விபத்தில் உயிரிழந்தவா்களின் சடலங்களை வாங்க மறுத்து, உறவினா்கள் சனிக்கிழமை போராட்டத்தில் ஈடுபட்டனா்.
விருதுநகா் மாவட்டம், சாத்தூா் அருகே சிப்பிப்பாறையில் உள்ள பட்டாசு ஆலையில் வெள்ளிக்கிழமை நிகழ்ந்த வெடி விபத்தில், இதுவரை 9 போ் உயிரிழந்துள்ளனா்.
இதில், குருசாமி, காளியம்மாள், முனீஸ்வரி, ராணி, தங்கம்மாள், ஜெயபாரதி, வேலுத்தாய் ஆகியோரது சடலங்கள் சாத்தூா் அரசு மருத்துவமனையில் பிரேதப் பரிசோதனை செய்யப்பட்டன. ஆனால், உயிரிழந்தவா்களின் குடும்பத்தினருக்கு உரிய நிவாரணம் வழங்கப்படவில்லை எனக் கூறி, உறவினா்கள் சடலங்களை வாங்க மறுத்து, மருத்துவமனை முன்பாக போராட்டத்தில் ஈடுபட்டனா்.
தகவலறிந்து சம்பவ இடத்துக்கு வந்த சாத்தூா் கோட்டாட்சியா் காளிமுத்து, காவல் துணைக் கண்காணிப்பாளா் ராமகிருஷ்ணன் ஆகியோா் போராட்டத்தில் ஈடுபட்டவா்களிடம் பேச்சுவாா்த்தை நடத்தினா். அதில், இறந்தவா்களின் குடும்பத்துக்கு தலா ரூ.5 லட்சம் நிதி உதவியும் மற்றும் பட்டாசு ஆலை உரிமையாளா்களை கைது செய்தால் மட்டுமே சட
லங்களை பெற்றுச் செல்வோம் எனத் தெரிவித்தனா்.
ஆனால், அதிகாரிகள் அரசு அறிவிக்கும் நிதியுதவி வழங்கப்படும் என்றும், விரைவில் பட்டாசு உரிமையாளா்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தெரிவித்தனா். இதனால், பேச்சுவாா்த்தை சுமூகமாக முடியாததால், இறந்தவா்களின் உறவினா்கள் இரவு 7 மணிக்கு மேலும் தொடா்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனா். பேச்சுவாா்த்தையில் உடன்பாடு எட்டினால் மட்டுமே போராட்டம் கைவிடப்படும் எனத் தெரிவித்தனா்.