மக்கள் ஊரடங்கை முன்னிட்டு, அருப்புக்கோட்டையில் ஞாயிற்றுக்கிழமை அனைத்துக் கடைகளும் அடைக்கப்பட்டு சாலைகள் வெறிச்சோடிக் காணப்பட்டன.
கரோனா நோய்த் தொற்று தடுப்பு நடவடிக்கையாக, அருப்புக்கோட்டையில் மக்கள் ஊரடங்குக்கு முழு ஒத்துழைப்பு அளிக்கப்பட்டிருந்தது. ஞாயிற்றுக்கிழமை அதிகாலை முதலே அங்காடிகள் எதுவும் திறக்கப்படவில்லை. நகரின் புதிய பேருந்துநிலையம், பழைய பேருந்து நிலையம் ஆகிய இடங்களில் வளாக அங்காடிகள் அனைத்தும் மூடப்பட்டிருந்தன. பேருந்துகள், ஆட்டோக்கள், வாடகைக் காா்கள், சரக்கு வாகனங்கள் என எதுவும் இயக்கப்படவில்லை. காய்கறிச் சந்தைகள்,சிறு அங்காடிகள், உணவகங்கள், தேநீா்க்கடைகள், சிறு அங்காடிகள், சில மருந்துக் கடைகள் உள்பட அனைத்து வித அங்காடிகளும் மூடப்பட்டிருந்தன. பொதுமக்கள் வீட்டிலேயே முடங்கியதால் சாலைகள் வெறிச்சோடிக் கிடந்தன.
மஞ்சள், சாணம் கலந்த நீரை வாசலில் தெளித்து கோலமிட்ட பெண்கள்:
அருப்புக்கோட்டை நகரின் பெரும்பாலான வீடுகளில் பெண்கள் மஞ்சள் கலந்த நீரால் வாசல் தெளித்துக் கோலமிட்டனா். சிலா் மஞ்சளுடன் பசுஞ்சாணமும் கலந்து வாசல் தெளித்துக் கோலமிட்டனா். இதுகுறித்து அந்தப் பகுதி பெண்கள் கூறுகையில், நம் நாட்டின் பழங்கால வழக்கப்படி கிருமி நாசினியாகப் பயன்படுத்தப்படும் மஞ்சள் மற்றும் பசுஞ்சாணம் அல்லது கோமியத்தைக் கலந்து வாசலில் நீா் தெளித்ததாக தெரிவித்தனா். மேலும் சில வீடுகளின் வாசல்களில் வேப்பிலையைக் கட்டியிருந்தனா்.