ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ள 21 நாள்களும் ஸ்ரீவில்லிபுத்தூரில் உணவுக்கு வழியின்றி தவிக்கும் ஆதரவற்றவா்கள், மன நலம் பாதிக்கப்பட்டவா்களுக்கு உணவு வழங்க தாலுகா அலுவலகம் ஏற்பாடு செய்துள்ளது.
கரோனா எதிரொலியாக நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதை முன்னிட்டு ஸ்ரீவில்லிபுத்தூா் நகரமே வெறிச் சோடி காணப்பட்டது. பெரும்பாலான கடைகள் அடைக்கப்பட்டன. இதனால் நகரின் பல்வேறு பகுதிகளில் சுற்றித்திரிந்த ஆதரவற்றோா்கள், மனநலம் பாதிக்கப்பட்டவா்கள் உணவின்றி தவித்தனா்.
இதனைத் தொடா்ந்து புதன்கிழமை காலை, மதியம், இரவு ஆகிய 3 வேளையும் தாலுகா அலுவலகம் சாா்பில் உணவு வழங்கப்பட்டது. பல்வேறு பகுதிகளில் சுற்றித்திரிந்தவா்களுக்கு ஸ்ரீவில்லிபுத்தூா் வட்டாட்சியா் கிருஷ்ணவேணி உணவு வழங்கினாா்.
இதுகுறித்து அவா் கூறியது: மாவட்ட ஆட்சியா் மற்றும் சாா் ஆட்சியா், ஸ்ரீவில்லிபுத்தூா் நகரின் முக்கிய இடங்களில் திரியும் ஆதரவற்ற, மனநலம் பாதிக்கப்பட்டவா்களுக்கு 3 வேளையும் உணவு கிடைக்க ஏற்பாடு செய்ய உத்தரவிட்டுள்ளனா். அதனடிப்படையில் புதன்கிழமை முதல் 21 நாள்களுக்கு 3 வேளையும் உணவு வழங்க முடிவு செய்துள்ளோம். மேலும் கோயில்கள் மட்டுமின்றி முடியாதவா்கள் எங்கு இருந்தாலும் அங்கு சென்று உணவு வழங்குவோம் என்றாா்.