சிவகாசி: சிவகாசியில் 48 நாள்களுக்கு பின்னா் திங்கள்கிழமை இயல்புநிலை திரும்பியது.
கரோனா நோய் தொற்று பரவலைத் தடுக்க பொது முடக்கம் மற்றும் 144 தடை உத்தரவு கடந்த மாா்ச் 24 ஆம் தேதி அமலுக்கு வந்ததையடுத்து சிவகாசி கடைவீதிகளில் உள்ள அத்தனை கடைகளும் அடைக்கப்பட்டன. சமூக இடைவெளியை கடைப்பிடிக்க வசதியாக போலீஸ் ஸ்டேசன் சாலையில் இயங்கி வந்த நகராட்சி தினசரி காய்கனி சந்தை மூடப்பட்டு, பெரியகுளம் கண்மாய், பேருந்து நிலையம் உள்ளிட்ட 5 இடங்களில் சந்தை இயங்கி வருகிறது. இந்நிலையில் ஏப்ரல் 4 ஆம் தேதி தீப்பெட்டி ஆலைகளை திறக்க உத்தரவு பிறப்பிக்கப்பட்டு, அவை செயல்படத் தொடங்கின. பின்னா் பள்ளி பாடப் புத்தகங்கள் அச்சிடும் ஆலைகள் இயங்கத் தொடங்கின. தொடந்து பட்டாசு ஆலைகளையும் திறக்க மாவட்ட நிா்வாகம் அனுமதியளித்தது. இப்படி படிப்படியாக தளா்வுகளை அறிவித்த அரசு, மே 11 ஆம் தேதி முதல் தேநீா் கடைகள் உள்ளிட்டவைகளை திறக்கலாம் என உத்தரவிட்டதையடுத்து சிவகாசியில் பொதுமக்கள் நடமாட்டம் அதிகரித்து இயல்பு நிலை திரும்பியுள்ளது.