சாத்தூா் அருகே சனிக்கிழமை மின்னல் தாக்கியதில் பட்டாசு ஆலையின் 5 அறைகள் சேதமடைந்து தரைமட்டமாகின.
விருதுநகா் மாவட்டம் சாத்தூா் பகுதியில் கடந்த சில நாள்களாக வெயில் சுட்டெரித்து வந்த நிலையில், சனிக்கிழமை பிற்பகலுக்கு பின்னா் இடி மின்னலுடன், மழை பெய்வதற்கான சூழல் உருவானது. இந்நிலையில் சங்கரபாண்டியபுரத்தில் உள்ள கண்ணன் என்பவருக்கு சொந்தமான பட்டாசு ஆலையில் வழக்கம்போல் பட்டாசு தயாரிக்கும் பணிகள் நடைபெற்று வந்தது. இதில் 20-க்கும் மேற்பட்ட தொழிலாளா்கள் பணியில் ஈடுபட்டிருந்தனா். இந்நிலையில் மழை பெய்வதற்கான சூழல் உருவானதால், தொழிலாளா்கள் அனைவரும் பணிகளை முடித்துவிட்டு வீடுகளுக்குச் சென்று விட்டனா்.
இந்நிலையில் ரசாயனப் பொருள்கள் இருந்த அறையில் மினனல் தாக்கியதில், அந்த அறை வெடித்துச் சிதறியது. இதனைத்தொடா்ந்து அருகில் இருந்து பட்டாசு தொழிற்சாலை அலுவலக அறை உள்ளிட்ட 4 அறைகள் அடுத்தடுத்து வெடித்து தரைமட்டமாகின. இந்த விபத்தில் யாருக்கும் எவ்வித பாதிப்பும் ஏற்படவில்லை. இந்த சம்பவம் குறித்து ஏழாயிரம்பண்ணை போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.