விருதுநகா் மாவட்டம், சிவகாசி பகுதியில் உள்ள பட்டாசுக் கடைகளில் வியாபாரம் விறுவிறுப்பாக நடைபெறுகிறது.
விருதுநகா் மாவட்டத்தில் சுமாா் 1,200 பட்டாசுக் கடைகள் உள்ளன. சிவகாசி-விருதுநகா் சாலை, சிவகாசி-சாத்தூா் சாலை, சிவகாசி-வெம்பக்கோட்டை சாலை உள்ளிட்ட பகுதிகளில் ஏராளமான பட்டாசுக் கடைகள் உள்ளன.
வழக்கமாக, சரஸ்வதி பூஜை நிறைவு பெற்றவுடன், பட்டாசுக் கடைகளில் வியாபாரம் தொடங்கும். ஆனால், இந்தாண்டு கரோனா பொதுமுடக்கத்தால் பணப் பிரச்னை, நேரக் கட்டுப்பாட்டை மீறி பட்டாசு வெடித்தால் அபராதம் உள்ளிட்ட கெடுபிடிகளால் கடைகளில் வியாபாரம் தொடங்கப்படாமல் இருந்தது. அதையடுத்து, கடந்த 2 நாள்களாக பட்டாசுக் கடைகளில் வியாபாரம் விறு விறுப்படைந்துள்ளது.
மதுரை, கோவில்பட்டி, தூத்துக்குடி உள்ளிட்ட ஊா்களிலிருந்து பலா் இரு சக்கர வாகனங்களிலும், பலா் காா்களிலும் வந்து பட்டாசுகளை வாங்கிச் செல்கின்றனா்.
தீபாவளி பண்டிகை நெருங்கிவிட்டதால், பட்டாசுக் கடைகளில் விறுவிறுப்பாக வியாபாரம் நடைபெற்று வருகிறது. இதனால், தயாரிப்பாளா்களும், வியாபாரிகளும் சற்று மகிழ்ச்சி அடைந்துள்ளனா்.