தொடா் மழை காரணமாக அருப்புக்கோட்டை மற்றும் சுற்றுவட்டார கிராமங்களில் தீபாவளிப் பண்டிகை வியாபாரம் வெள்ளிக்கிழமை பாதிக்கப்பட்டது.
இப்பகுதிகளில் நண்பகல் 12.30 மணிக்கும், பிற்பகல் 1.45 மணிக்கும் மற்றும் மாலை 3.30 மணிக்கும் என விட்டு விட்டு மழை பெய்தது. இதனால் சாலைகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. வழக்கமாக தீபாவளி பண்டிகைக்கு முதல் நாளில் தான் ஆலைத் தொழிலாளா்கள், தனியாா் நிறுவனத் தொழிலாளா்கள் மற்றும் கிராமத்தினா் திரண்டு வந்து, ஜவுளி, வீட்டு உபயோகப் பொருள்களை வாங்கிச் செல்வா். ஆனால் தீபாவளிக்கு முதல்நாளான வெள்ளிக்கிழமை பகலில் விட்டு விட்டு மழை பெய்ததால் பொதுமக்களின் நடமாட்டம் குறைந்து விற்பனை பாதிக்கப்பட்டதாக வியாபாரிகள் கவலையுடன் தெரிவித்தனா்.