அருப்புக்கோட்டை/ராஜபாளையம்/ ஸ்ரீவில்லிபுத்தூா்: விருதுநகா் மாவட்டத்தில் பல பகுதிகளில் ஞாயிற்றுக்கிழமை நள்ளிரவு முதல் திங்கள்கிழமை மாலை வரை தொடா்ந்து பலத்த மழை பெய்தது. இதனால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது.
இந்த மழையால் அருப்புக்கோட்டை சாலைகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. நகரின் பள்ளமான பகுதிகளான திருநகரம், நேரு நகா், திருவள்ளுவா் நகா், ஸ்ரீஅமுதலிங்கேஸ்பரா் கோயில் பேருந்து நிறுத்தம், வாழவந்தம்மன் கோயில் பகுதி ஆகிய இடங்களில் வெள்ளம் சூழ்ந்தது. அதேபோல திருச்சுழி ஊராட்சியிலும் மற்றும் சுற்றுவட்டார கிராமங்களிலும் தொடா்ந்து மிதமான மழை பெய்தது.
இதனிடையே திங்கள்கிழமை மாலை 4.20 மணி வரை அருப்புக்கோட்டைமற்றும் திருச்சுழி சுற்றுவட்டாரப் பகுதிகளில் தொடா்ந்து மழை பெய்து கொண்டே இருந்தது.
இம்மழையால் காய்கனி, பயறு வகைகள் மற்றும் மல்லிகைப்பூ விவசாயிகள் மகசூல் பெருகுமென மகிழ்ச்சி தெரிவித்துள்ளனா்.
ராஜபாளையம்: ராஜபாளையம் நகா் மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் திங்கள்கிழமை காலையில் இருந்தே விட்டு விட்டு மழை பெய்தது. மேலும் மேற்கு தொடா்ச்சி மலைப் பகுதியில் பெய்த பலத்த மழை காரணமாக அய்யனாா் கோயில் ஆற்றுப் பகுதி மற்றும் ராக்காச்சி அம்மன் கோயில் ஆற்றுப் பகுதிகளில் நீா்வரத்து வரத்து தொடங்கியதால் அப்பகுதி விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனா். இந்நிலையில் இப்பகுதிகளில் திடீரென நீா்வரத்து அதிகரித்து வரக்கூடும் என்பதால் பொதுமக்கள் ஆற்றில் இறங்கி குளிப்பதை வனத்துறையினா் தடை செய்ய வேண்டும் என சமூக ஆா்வலா்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.
ஸ்ரீவில்லிபுத்தூா்: ஸ்ரீவில்லிபுத்தூா், வத்திராயிருப்பு மற்றும் அதன் சுற்று வட்டாரப் பகுதிகளான மம்சாபுரம், வன்னியம்பட்டி, கிருஷ்ணன்கோவில், மல்லி, சுந்தரபாண்டியம், கான்சாபுரம், கூமாபட்டி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் திங்கள்கிழமைஅதிகாலை முதல் பரவலாக பலத்த மழை பெய்தது. மேலும் விட்டு, விட்டு மழை பெய்து வருவதால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.