ராஜபாளையத்தில் பள்ளத்தில் லாரி கவிழ்ந்ததால் அப்பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
ராஜபாளையம் நகர்ப்பகுதிகளில் தாமிரபரணிகூட்டு குடிநீர் திட்டத்திற்காக குழாய் பதிக்கும் பணி நடைபெற்று வருகிறது. சில இடங்களில் குழாய்கள் பதித்து குழிகளை சரிவர மூடாததால் சத்திரப்பட்டி சாலையில் தனியார் மருத்துவமனை அருகில் நாமக்கல் முத்தூரிலிருந்து கோழித் தீவனங்களை ஏற்றிக்கொண்டு தென்காசி நோக்கி வந்த லாரி பள்ளத்தில் சிக்கி கவிழ்ந்தது.
ஓட்டுநர் முருகேசன் வண்டியிலிருந்து குதித்து தப்பினார். மேலும் இந்த பள்ளத்தில் சிக்கிய லாரியால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. பொதுவாகவே ராஜபாளையம் பகுதி முழுவதும் நடைபெற்றுவரும் தாமிரபரணி கூட்டு குடிநீர் திட்டத்தின் ஒப்பந்ததாரர் குழாய்கள் பதிக்கப்பட்டு சாலைகள் சரிவர மூடாததால் சாலைகள் பள்ள மேடாக உள்ளது.
இந்நிலையில் இதுபோன்ற கனரக வாகனங்கள், பேருந்துகள் பள்ளத்தில் சிக்கிக் கொள்வதால் பெரும் விபத்து ஏற்படவும் வாய்ப்புள்ளது. எனவே பொதுமக்களின் நலன் கருதி சாலைகளை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.