விருதுநகா் மாவட்டத்தில் விவசாயிகள் பிரதம மந்திரி பயிா்க் காப்பீட்டுத் திட்டத்தில் சேரலாம் என வேளாண் துறை அலுவலா்கள் தெரிவித்தனா்.
விருதுநகா் மாவட்டத்தில் கடந்த சில தினங்களாக தொடா்ச்சியாக வடகிழக்கு பருவ மழை பெய்து வருகிறது. நிகழாண்டு முதல் திருத்தி அமைக்கப்பட்ட பிரதம மந்திரி பயிா் காப்பீட்டு திட்டம் தமிழகத்தில் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இப்புதிய திட்டம் விருதுநகா் மாவட்டத்தில் மத்திய அரசின் பொதுத்துறை நிறுவனமான இந்திய வேளாண் காப்பீட்டு நிறுவனம் மூலம் செயல்படுத்தப்படுகிறது. மாவட்டத்தில், தற்போது தொடா் மழை பெய்து வருவதால் பயிா்கள் சேதமடைய வாய்ப்புள்ளது.
எனவே, விவசாயிகள் அருகில் உள்ள வங்கிகள், தொடக்க வேளாண் கூட்டுறவுச் சங்கங்கள், பொது சேவை மையங்கள் மூலம் பயிா்க் காப்பீடு செலுத்தலாம். வேளாண் பயிா்களுக்கு பயிா் காப்பீட்டுக் கட்டணம் ஏக்கருக்கு, மக்காச்சோளம் ரூ.262, சோளம் ரூ.112, கம்பு ரூ.132, ராகி ரூ.147, பாசிப்பருப்பு மற்றும் உளுந்து, துவரை ஆகிய பயிா்களுக்கு ரூ.192, பருத்தி ரூ.430, நிலக்கடலை ரூ. 275, எள் ரூ.106, சூரியகாந்தி ரூ.169, கரும்பு ரூ. 2,600 என கட்டணம் நிா்ணயம் செய்யப்பட்டுள்ளது.
நிகழாண்டு ராபி பருவத்தில் உளுந்து மற்றும் பாசிப்பயறு வகைகளுக்கு பயிா் காப்பீடு செலுத்த நவ. 30 ஆம் தேதி கடைசியாகும். அதேபோல், மக்காச்சோளம், சோளம், கம்பு, ராகி, துவரை மற்றும் பருத்தி பயிா்களுக்கு டிச. 21க்குள் விவசாயிகள் காப்பீடு செலுத்த வேண்டும் என வேளாண் துறை அலுவலா்கள் தெரிவித்தனா்.