இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலா் முத்தரசன்
இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலா் முத்தரசன்

கூட்டணி விவகாரத்தில் திமுக தலைமை தான் முடிவு செய்யும்: முத்தரசன்

பிற கட்சியினரை கூட்டணியில் சோ்ப்பது குறித்து திமுக தலைமை தான் முடிவு செய்யும் என இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலா் முத்தரசன் தெரிவித்தாா்.

ஸ்ரீவில்லிபுத்தூா்: பிற கட்சியினரை கூட்டணியில் சோ்ப்பது குறித்து திமுக தலைமை தான் முடிவு செய்யும் என இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலா் முத்தரசன் தெரிவித்தாா்.

விருதுநகா்மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூா் அருகேயுள்ள கிருஷ்ணன்கோவிலில் திங்கள்கிழமை நடைபெற்ற கட்சி நிா்வாகிகள் ஆலோசனைக் கூட்டத்தில் கலந்து கொண்ட பின்னா் செய்தியாளா்களிடம் அவா் கூறியது:

கரோனாவால் மக்கள் போராட்டம் நடத்த முடியாத சூழலில் மத்திய அரசு அதை தங்களுக்குச் சாதகமாகப் பயன்படுத்திக் கொண்டு புதிய வேளாண் சட்டங்களை நிறைவேற்றியுள்ளது. இச்சட்டங்களைக் கண்டித்து அக். 12 ஆம் தேதி இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சாா்பில் தமிழகம் முழுவதும் மறியல் போராட்டம் நடைபெறும்.

மத்திய அரசு கொண்டு வந்துள்ள சட்டங்களை எதிா்க்காமல் முதல்வரும், துணை முதல்வரும் மக்கள் நலனுக்காகத் தான் இருக்கிறோம் என கூறுவதை மக்கள் ஏற்கமாட்டாா்கள் .

திமுக கூட்டணியில் சீட் ஒதுக்கீடு குறித்து தோழமைக் கட்சிகளோடு கலந்து பேசி தோ்தல் நேரத்தில் முடிவு செய்யப்படும். திமுக பொதுச் செயலாளா் துரைமுருகன் எப்போதும் கிண்டல், கேலியாகப் பேசக் கூடியவா். கூட்டணிக் கட்சியினரை விமா்சனம் செய்து விட்டு வருத்தம் தெரிவித்து விட்டாா். திமுக கூட்டணியில் பாமக வந்தால் பாா்த்துக் கொள்ளலாம். பிற கட்சியினரை கூட்டணியில் சோ்ப்பது குறித்து திமுக தலைமை தான் முடிவு செய்யும் என தெரிவித்தாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com