அருப்புக்கோட்டை வட்டம் பந்தல்குடி அருகே சேதுராஜபுரம் பகுதியில் உள்ள அருள்மிகு ஸ்ரீடி சாய்பாபா கோவிலில் நவராத்திரி விழாவை முன்னிட்டு முதல்நாள் சிறப்பு வழிபாடு நடைபெற்றது.
விருதுநகர் மாவட்டம், பந்தல்குடி அருகே உள்ள அருள்மிகு ஸ்ரீடி சாய்பாபா கோயிலில் நவராத்திரி விழாவை முன்னிட்டு முதல்நாள் சிறப்பு பூஜை சனிக்கிழமை நடைபெற்றது. இதன்படி கோவில் சந்நிதானம் முன்பாக சரஸ்வதி, லட்சுமி, பார்வதி ஆகிய முப்பெரும் தேவியரின் உருவ பொம்மைகளும், ராதா கிருஷ்ணன், முருகன், விநாயகர், திருமண விழா, திருப்பதி வெங்கடாசலபதி கோயில் கோபுரம், பெண்கள், குழந்தைகள், காவலர், உழவர் உள்ளிட்ட பலவித உருவ பொம்மைகளும் 9 படிகள் அமைத்து அதன்மேல் கொலுவாக, அலங்காரமாக வைக்கப்பட்டன.
அப்போது ஸ்ரீடிசாய்பாபாவிற்கு நண்பகல் தீப,தூப ஆராதனைகள் நடைபெற்றதும் அதனைத் தொடர்ந்து நவராத்திரி முதல்நாளுக்கான சிறப்பு மந்திரங்கள் சொல்லி பெண்கள் வழிபட்டனர். பின்னர் கொலுவிற்கும் சிறப்பு தீப, தூப ஆராதனைகள் நடைபெற்றன. பூஜையில் கலந்து கொண்ட அனைவருக்கும் பிரசாதங்கள் வழங்கப்பட்டன.