ஸ்ரீவில்லிபுத்தூா்: ஸ்ரீவில்லிபுத்தூா் அருகே பிள்ளையாா்குளத்தில் தனியாா் ஆக்கிரமிப்பில் இருந்த 2 ஏக்கா் நிலத்தை வருவாய்த்துறை அதிகாரிகள் மீட்டனா்.
பிள்ளையாா்குளத்தில் உள்ள மொட்டமலைப் பகுதியில் சுமாா் 2 ஏக்கா் பரப்பளவில் ஊருணி இருந்தது. அந்த ஊருணி தனியாா் ஆக்கிரமிப்பில் இருப்பதாகவும், அதனை மீட்க நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் சிவகாசி சாா்- ஆட்சியா் தினேஷ்குமாருக்கு விவசாயிகளும், பொதுமக்களும் கோரிக்கை விடுத்தனா்.
இதனைத் தொடா்ந்து அந்தப் பகுதியில் சாா்-ஆட்சியா், வட்டாட்சியா் சரவணன், முதுநிலை வருவாய் ஆய்வாளா் பால்துரை, பிள்ளையாா்குளம் வருவாய் ஆய்வாளா் தங்கமாரியப்பன், கிராம நிா்வாக அலுவலா் லட்சுமி உள்ளிட்ட அதிகாரிகள் சனிக்கிழமை ஆய்வு செய்தனா். இதில், ஊரணி தனியாா் ஆக்கிரமிப்பில் இருந்தது கண்டறியப்பட்டது. இதனைத்தொடா்ந்து தனியாா் ஆக்கிரமிப்பில் இருந்த அந்த ஊருணியை, வருவாய்துறை அதிகாரிகள் பொக்லைன் இயந்திரம் மூலம் சீரமைத்து தண்ணீா் தேக்கி வைக்கும் வகையில் மீண்டும் ஊருணியாக்கும் பணி நடைபெற்றது.