ஸ்ரீவில்லிபுத்தூர் நகர் பகுதியில் ஐந்து இடங்களில் கம்யூனிஸ்ட் கட்சியினர் வியாழக்கிழமை மாலை துண்டுப் பிரச்சார இயக்கத்தில் ஈடுபட்டனர்.
விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் நடைபெற்ற துண்டுப் பிரச்சாரத்தில் மத்திய, மாநில அரசுகள் கரோனா நிவாரணமாக ரூ.12 ஆயிரத்து 500 வழங்க வேண்டும், மத்திய அரசு பொது முடக்கத்தைப் பயன்படுத்தி மின்சாரத் திருத்தச்சட்டம், விளைபொருள் சட்டத் திருத்தம், தொழிலாளர் சட்டத் திருத்தம், பொதுத்துறைகளை தனியார் மயமாக்குவது ஆகியவற்றை ரத்து செய்ய வேண்டும் உள்ளிட்டக் கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டது.
இந்தத் துண்டு பிரச்சார நிகழ்ச்சிக்கு இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் நகரச் செயலாளர் மூர்த்தி தலைமை வகித்தார். முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினர் ராமசாமி பிரச்சாரத்தை துவக்கி வைத்தார்.
இந்த பிரச்சார இயக்கம் ராமகிருஷ்ணாபுரம் நகர், பேருந்து நிலையம், சின்னக்கடை பஜார், சர்ச் பேருந்து நிறுத்தம், வடக்கு ரதவீதி ஆகிய 5 இடங்களில் நடைபெற்றது.
விவசாய சங்க மாவட்டச் செயலாளர் சௌந்தரபாண்டியன், ஒன்றிய செயலாளர் வேதநாயகம், ஒன்றிய துணைச் செயலாளர் பலவேசம் செல்வம், மாவட்டக்குழு உறுப்பினர் வெள்ளைச்சாமி, வத்திராயிருப்பு கழக உறுப்பினர் கோவிந்தன் உள்ளிட்டோர் பங்கேற்று வணிகர்கள் மற்றும் பொதுமக்களுக்கு துண்டு பிரசுரங்களை வழங்கினர்.