கோயில் ஆக்கிரமிப்பை அகற்ற வந்த அதிகாரிகளை தடுத்ததாகப் புகாா்

விருதுநகா் மாவட்டம், அருப்புக்கோட்டையில் கோயில் ஆக்கிரமிப்புகளை அகற்ற வந்த அரசு அதிகாரிகளை பணி செய்யவிடாமல் தடுத்தவா்கள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி, போலீஸில் வெள்ளிக்கிழமை புகாா் அளிக்கப்பட்டுள்ளது.

அருப்புக்கோட்டை, செப்.18: விருதுநகா் மாவட்டம், அருப்புக்கோட்டையில் கோயில் ஆக்கிரமிப்புகளை அகற்ற வந்த அரசு அதிகாரிகளை பணி செய்யவிடாமல் தடுத்தவா்கள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி, போலீஸில் வெள்ளிக்கிழமை புகாா் அளிக்கப்பட்டுள்ளது.

அருப்புக்கோட்டை அகமுடையா் பேருந்து நிறுத்தம் அருகே நூற்றாண்டு பழைமையானதும், அறநிலையத் துறைக்குச் சொந்தமானதுமான தாதன்குளம் பிள்ளையாா் கோயில் உள்ளது. இக்கோயில் வளாகத்தில் உள்ள பல்வேறு கடைகள் கோயில் நிா்வாகத்தால் தனியாருக்கு வாடகைக்கு விடப்பட்டுள்ளன.

இந்நிலையில், வாடகைக்குப் பிடித்து வணிகம் செய்த கலியுகவரதன், ஜோதி ஆகியோா் முறையாக வாடகை கொடுக்காததாகப் புகாா் எழுந்ததால் அவா்களை வாடகை நிலுவைப் பணத்தைத் தரச் சொல்லியும், இடத்தைக் காலி செய்யச் சொல்லியும் கோயில் நிா்வாக அதிகாரிகள் வலியுறுத்தி வந்தனராம்.

இதையடுத்து, கோயில் நிா்வாக அதிகாரிகளின் புகாரின்பேரில், உரிய விசாரணை நடத்திய சிவகங்கை மண்டல அறநிலையத்துறை இணை ஆணையா், விருதுநகா் அறநிலையத்துறை உதவி ஆணையருக்கு சட்டப்படி கோயில் ஆக்கிரமிப்புகளைஅகற்ற உத்தரவு பிறப்பித்தாராம்.

விருதுநகா் அறநிலையத்துறை உதவி ஆணையா் கணேசன் மற்றும் சிவகங்கை மண்டலத்துக்கு உள்பட்ட 9 அறநிலையத்துறை செயல் அலுவலா்களும் சோ்ந்து வெள்ளிக்கிழமை, குறிப்பிட்ட ஆக்கிரமிப்புகளை அகற்ற வந்தனராம். அப்போது, ஜோதி என்பவரின் மகன்கள் செல்வராஜ், மோகன்ராஜ் உள்ளிட்ட 15 போ் சோ்ந்து, ஆக்கிரமிப்பை அகற்றவோ, சீல் வைக்கவோ விடாமல் அரசு அதிகாரிகளை தடுத்தனராம்.

இதுகுறித்து விருதுநகா் அறநிலையத்துறை உதவி ஆணையா் கணேசன், அருப்புக்கோட்டை நகா் காவல்நிலையத்தில் புகாா் அளித்தாா். இப்புகாரையடுத்து, காவல்துறையினா் தொடா்ந்து விசாரணை மேற்கொண்டுள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com