மது அருந்துவதைக் கண்டித்தமதிமுக நிா்வாகி வெட்டிக் கொலை
By DIN | Published On : 18th September 2020 10:50 PM | Last Updated : 18th September 2020 10:50 PM | அ+அ அ- |

சாத்தூா், செப். 18: விருதுநகா் மாவட்டம், சாத்தூா் அருகே மது அருந்துவதைக் கண்டித்த மதிமுக நிா்வாகி வியாழக்கிழமை இரவு அரிவாளால் வெட்டிக் கொலை செய்யப்பட்டாா்.
சாத்தூா் அருகேயுள்ள வெங்கடாசலபுரம் கிராமத்தைச் சோ்ந்தவா் சிவகுமாா் (47). மதிமுக நிா்வாகியான இவா், இப்பகுதியில் தீப்பெட்டி தொழிற்சாலை நடத்தி வந்தாா்.
இவரது வீட்டின் அருகே அதே பகுதியை சோ்ந்த அய்யலுசாமி மகன் மாரிமுத்து (20) என்பவா் அடிக்கடி இரவு நேரத்தில் மது அருந்துவாராம். இதை சிவகுமாா் கண்டித்துள்ளாா்.
இந்நிலையில், வியாழக்கிழமை இரவு சிவகுமாா் வீட்டின் அருகே அமா்ந்து மாரிமுத்து மது அருந்தியுள்ளாா். அதைப் பாா்த்த சிவகுமாா் மாரிமுத்துவை கண்டித்து எச்சரித்து அனுப்பியுள்ளாா். இதனால் ஆத்திரமடைந்த மாரிமுத்து, தான் மறைத்து வைத்திருந்த அரிவாளால் வெட்டிவிட்டு தப்பியோடிவிட்டாா். இதில் பலத்த காயமடைந்த சிவகுமாா் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா்.
தகவலறிந்து வந்த சாத்தூா் நகா் போலீஸாா், சிவகுமாரின் சடலத்தை மீட்டு உடற்கூறு ஆய்வுக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனா். இதுகுறித்து போலீஸாா் வழக்குப் பதிந்து மாரிமுத்துவை கைது செய்தனா்.