அருப்புக்கோட்டையிலிருந்து செம்பட்டி செல்லும் சாலையோரம் குவிந்துள்ள குப்பைகளால் சுகாதாரக் கேடான சூழல் நிலவுகிறது.
அருப்புக்கோட்டையிலிருந்து செம்பட்டி செல்லும் சாலையில் அதிக அளவில் இரு சக்கர, நான்கு சக்கர வாகனப் போக்குவரத்து உண்டு. இந்நிலையில் இச்சாலையுடன் உஜ்ஜிசாமி கோவில் 3 ஆவது தெரு இணையுமிடத்தில் மிக அதிக அளவில் குப்பைகள் குவிந்துள்ளன. அவை காற்றுக்கு சாலையெங்கும் சிதறி, வாகனங்களில் சிக்கிப் பரவி வருவதுடன் சுகாதாரக்கேடான சூழலையும், நோய்த்தொற்று அபாயத்தையும் ஏற்படுத்துகின்றன.
மேலும் அண்மையில் அடுத்தடுத்த நாள்களில் பெய்த மழையில் துா்நாற்றமும் உண்டாவதால் இப்பகுதி குடியிருப்புவாசிகள் அவதிக்கு ஆளாகின்றனா். இங்கு குப்பைத்தொட்டிகள் அமைக்கப்படாதது ஒரு காரணமெனினும், சாலையோரம் கொட்டப்பட்டுள்ள குப்பைகள் பல நாள்களுக்கு ஒரு முறையே அகற்றப்படுவதாகவும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது. எனவே நோய்த்தொற்று அபாயத்திலிருந்து பொதுமக்களைக் காக்கும் விதமாக இப்பகுதியில் குப்பைத் தொட்டிகளை அமைத்து, நாள்தோறும் குப்பைகளை அகற்றி சுகாதாரத்தைப் பேணவேண்டுமென, அங்குள்ள குடியிருப்புவாசிகள், நகராட்சி சுகாதாரத்துறை அதிகாரிகளுக்குக் கோரிக்கை வைத்துள்ளனா்.