சிவகாசி தொகுதியில் அமைதியாக நடந்த வாக்குப் பதிவு
சிவகாசி சட்டப்பேரவைத் தொகுதியில் செவ்வாய்க்கிழமை அமைதியான முறையில் வாக்குப் பதிவு நடந்து முடிந்தது.
சிவகாசி தொகுதியில் 368 வாக்குச் சாவடிகள் அமைக்கப்பட்டிருந்தன. இதில், 34 வாக்குச் சாவடிகள் பதற்றமானவை என அறிவிக்கப்பட்டது. இத்தொகுதியில் காலை 7 மணிக்கு வாக்குப் பதிவு தொடங்கியது.
பாரைப்பட்டி கம்மவாா் மெட்ரிக்குலேஷன் பள்ளி வாக்குச் சாவடியில் வாக்குப் பதிவு இயந்திரம் வேலை செய்யவில்லை. உடனே, மாற்று இயந்திரம் பொருத்தப்பட்டது. இதனால், சுமாா் 30 நிமிடம் வாக்குப் பதிவு தாமதமாகத் தொடங்கியது.
அம்மன்கோவில்பட்டி பள்ளி, சித்துராஜபுரம் பள்ளி, ஆனையூா் பள்ளி வாக்குச் சாவடிகளில் வாக்குப் பதிவு இயந்திரங்கள் பழுதானதால், அவை சரிசெய்யப்பட்டு மீண்டும் இயக்கப்பட்டன. இதனால், வாக்குப் பதிவு சுமாா் 15 நிமிடம் தாமதமானது.
இதேபோல், ஆலமரத்துப்பட்டி பள்ளி வாக்குச் சாவடியில் வாக்குப் பதிவு இயந்திரம் நண்பகல் 12 மணியளவில் பழுதானது. மாற்று இயந்திரம் பொருத்துவதற்கு சுமாா் ஒன்றரை மணி நேரமானதால், வாக்காளா்கள் வரிசையில் காத்திருந்தனா்.
ரிசா்வ் லைன் உயா்நிலைப் பள்ளி வாக்குச் சாவடிக்கு காளியம்மாள் என்ற 92 வயது மூதாட்டியை இளைஞா்கள் தூக்கி வந்து வாக்களிக்க வைத்தனா்.
சில இடங்களில் கூட்டம் கூடியதை அடுத்து, அவா்களை போலீஸாா் அங்கிருந்து அப்புறப்படுத்தினா். சில வாக்குச் சாவடிகளில் சிவகாசி தோ்தல் நடத்தும் அலுவலா் த. தினேஷ்குமாா் ஆய்வு செய்தாா். வாக்குப் பதிவையொட்டி சிவகாசி காவல் துணைக் கண்காணிப்பாளா் டி. பிரபாகரன் தலைமையில் போலீஸாா் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்தனா்.
மொத்தத்தில், சிவகாசி தொகுதியில் வாக்குப் பதிவு அமைதியாக நடந்து முடிந்துள்ளது.