அருப்புக்கோட்டை பந்தல்குடியைச் சேர்ந்தவரும், தொகுதி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்ட செயற்குழு உறுப்பினருமான ஆர்.சந்திர மோகன், கரோனா நோயால் சிகிச்சை பலனின்றி வியாழக்கிழமை உயிரிழந்தார்.
விருதுநகர் மாவட்டம், அருப்புக்கோட்டை தொகுதி மா.கம்யூ. கட்சியின் மாவட்ட செயற்குழு உறுப்பினர் ஆர்.சந்திரமோகன்(52). இவர் அருப்புக்கோட்டை அருகே பந்தல்குடியைச் சேர்ந்தவர். இந்நிலையில் கடந்த 3-ம் தேதியன்று தொடர் காய்ச்சல், மூச்சுத்திணறலுடன் இவர் அருப்புக்கோட்டை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காகச் சேர்ந்தாராம்.
அன்றே அவருக்கு கரோனா பரிசோதனை செய்த பின்னர் மேல்சிகிச்சைக்காக மதுரை அரசு மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டாராம். கடந்த 3-ம் தேதி நடந்த பரிசோதனை முடிவின்படி அவருக்குக் கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.
அதேவேளை, தொடர்ந்து சிகிச்சையிலிருந்த அவர் வியாழக்கிழமை காலை 7 மணிக்கு சிகிச்சை பலனின்றி உயிரிழந்துவிட்டாராம். பின்னர் உரிய சுகாதார நடவடிக்கைகளுடன் அவரது உடல் சுகாதாரத்துறையினர் மூலம் நல்லடக்கம் செய்யப்பட்டது.
மா.கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்ட செயற்குழு உறுப்பினரான, இறந்த சந்திரமோகனுக்கு, அக்கட்சியினர் சார்பில் அமைதி ஊர்வலமும், இறுதி அஞ்சலியும் செலுத்தப்பட்டது. இதையடுத்து, இறந்த சந்திரமோகனின் வீடு உள்ள பகுதியில் சுகாதாரத்துரையினர் தீவிர தொற்று தடுப்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டனர்.