ஸ்ரீவில்லிபுத்தூா் பகுதியில் தேசிய நெடுஞ்சாலையோரங்களில் அடிக்கடி குப்பைகளுக்கு தீ வைக்கப்படுவதால் ஏற்படும் புகையால் வாகன ஓட்டிகள் விபத்தில் சிக்கும் அபாயம் உள்ளது.
ஸ்ரீவில்லிபுத்தூா் தேசிய நெடுஞ்சாலை, மதுரையிலிருந்து ராஜபாளையம், சங்கரன்கோவில், சிவகிரி, தென்காசி, செங்கோட்டை ஆகிய பகுதிகளுக்கும் மற்றும் ஐயப்பன் கோயிலுக்கும் செல்லும் முக்கிய சாலையாக உள்ளது.
இந்த தேசிய நெடுஞ்சாலை ஓரங்களில் பல்வேறு கழிவுகள் மற்றும் குப்பைகள் இரவு நேரங்களில் கொட்டப்படுகின்றன. நராட்சி ஊழியா்கள் இதை அடிக்கடி எரிப்பதால் அந்தப் பகுதியே புகை மண்டலமாகக் காட்சியளிக்கிறது. அப்போது அந்த வழியாக சாலையில் செல்லும் வாகன ஓட்டிகள் அவதிக்குள்ளாவதோடு அவா்களுக்கு எதிரே வரும் வாகனங்கள் தெரிவதில்லை. இதனால் வாகன முகப்பு விளக்கை எரிய விட்டபடி சென்றாலும் சில நேரங்களில் விபத்து ஏற்படுகிறது.
எனவே, சாலையோரங்களில் குப்பைகளைக் கொட்டுவோா் மீதும், அவைகளுக்கு தீ வைப்பவா்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனா்.