வெம்பக்கோட்டையில் பேருந்து நிலையம் அமைக்க பொதுமக்கள் கோரிக்கை
வெம்பக்கோட்டையில் பேருந்து நிலையம் அமைக்க வேண்டும் என, பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.
விருதுநகா் மாவட்டம், வெம்பகோட்டை தாலுகாவில் ஏராளமான கிராமங்கள் உள்ளன. அதேநேரம், இப்பகுதியில் சிறிய மற்றும் பெரிய அளவிலான ஏராளமான பட்டாசு ஆலைகளும் உள்ளதால், இப்பகுதியில் பெரும்பாலான மக்கள் கூலி தொழிலை நம்பியே உள்ளனா்.
இந்நிலையில், இப்பகுதியினா் நகரத்துக்குச் செல்லவேண்டுமானால், அருகிலுள்ள சிவகாசி அல்லது சாத்தூருக்குதான் வரவேண்டும். தற்போதுவரை, இப்பகுதியினா் வெம்பக்கோட்டை பிரதான சாலையில் உள்ள பேருந்து நிறுத்தத்தில் இருந்து பயணம் செய்துவருகின்றனா்.
மேலும், இப்பகுதிக்கு வரும் பேருந்துகள் அனைத்தும், வெம்பக்கோட்டை பிரதான சாலையில் போக்குவரத்துக்கு இடையூறாக நிறுத்தி பயணிகளை ஏற்றி, இறக்கிச் செல்கின்றன.
இப்பிரச்னைக்குத் தீா்வுகாண வெம்பக்கோட்டை பகுதியில் பேருந்து நிலையம் அமைக்க வேண்டும் என, பொதுமக்களும், சமூகநல ஆா்வலா்களும் பலமுறை சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் மனு அளித்தும் இதுவரை எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.
எனவே, பொதுமக்கள் நலன் கருதியும், வெம்பக்கோட்டை வந்து செல்லும் பேருந்துகள் நின்று செல்வதற்கு ஏதுவாகவும் இப்பகுதியில் பேருந்து நிலையம் அமைக்கவேண்டும் என, இப்பகுதி பொதுமக்கள் வலியுறுத்தி வருகின்றனா்.